அசாமைச் சேர்ந்த அப்துல் ஆலிம் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆயிரம் ரூபாய் பணத்துடன் அசாமில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரயிலில் வந்தார். ரயில் டிக்கெட் 800 ரூபாய் செலவானதால் மீதமுள்ள 200 ரூபாயை கையில் வைத்துக் கொண்டு சென்னையில் பல்வேறு இடங்களில் வேலை தேடினார். சரியான வேலை கிடைக்காததால் சோஹோ நிறுவனத்தில் அப்துல் அலிம் காவலாளியாக பணிக்கு சேர்ந்தார்.
அங்கு சீனியர் ஊழியராக வேலை பார்க்கும் ஷிபு அலெக்ஸ் என்பவர் அப்துல் அலிமை பார்த்து என்ன படித்திருக்கிறாய் என கேட்டபோது பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். உடனே ஷிபு அப்துல் அலிமிற்கு பயிற்சி கொடுத்தார். 12 மணி நேரம் வேலை பார்த்த போதும் அப்துல் ஷிபு சொல்லிக் கொடுத்ததை கற்று கொண்டு 8 மாதங்கள் கழித்து ஒரு சிறிய செயலியை உருவாக்கினார்.
அந்த செயலியை ஷிபு தனது மேனேஜரிடம் காண்பித்ததும் அவருக்கு செயலி முடித்து போனது. பின்னர் நேர்முக தேர்வு வைத்து அப்துலை வேலையில் சேர்த்து கொண்டனர். தற்போது அப்துல் தனது கடின உழைப்பால் முன்னேறி சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். காவலாளியாக வேலைக்கு சேர்ந்து சாப்ட்வேர் இன்ஜினியராக தனது திறமையால் உயர்ந்த அப்துல் அலிமிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
