திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த காட்டு நாயகன் நகர் பகுதியை சேர்ந்த மணிமாறன் (26) என்ற பழங்குடியின கூலி தொழிலாளி சாலை ஓரங்களில் உள்ள பழைய பிளாஸ்டிக், இரும்பு மற்றும் அட்டைப் பொருட்களை சேகரித்து அவற்றை எடைக்கு போட்டு விற்பனை செய்வது அதில் வரும் பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இதனிடையே கோணி மேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று பழைய பொருட்களை சேகரிக்கும் கூலி தொழிலாளி மணிமாறன் திருடுவதற்காக சென்று உள்ளார்.
இதனைக் கண்ட தொழிற்சாலை ஊழியர்கள் மணிமாறனை சிறைபிடித்து கைகளால் தாக்கியது மட்டுமல்லாமல் கம்பால் அடித்தும் அங்கிருந்த கம்பத்தில் கட்டி வைத்து இரும்பு ராடால் பயங்கரமாக தாக்கினர். மணிமாறன் நள்ளிரவு வரை வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தொழிற்சாலையில் அவர் இருப்பதாக தெரிய வந்ததை தொடர்ந்து அங்கு சென்று விவரம் கேட்டுள்ளார்.
அதற்கு தொழிற்சாலை சார்பாக பேசிய ஊழியர்கள் சிலர், இந்த நிறுவனத்தில் ஆறு லட்சம் ரூபாய் வரையிலான பொருட்கள் ஏற்கனவே திருடுபோய் உள்ளதாகவும் அந்த பணத்தை கொடுத்தால் விட்டு விடுவதாகவும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த நிலையில் எல்லையம்மன் பேட்டை கிராமத்தில் உள்ள கால்வாயில் மணிமாறன் கொலை செய்யப்பட்டு அவருடைய தலை மொட்டை அடிக்கப்பட்டு உடலில் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவருடைய உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தொழிற்சாலையின் உரிமையாளரின் மகன் உட்பட நான்கு பெயரை கைது செய்துள்ளனர். தொழிற்சாலையின் உரிமையாளர் தலைமறைவாக உள்ளதால் அவரைத் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
