தமிழகத்தில் பெண்களுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதில் முக்கியமான திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியுடைய பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் நிலையில் பலருக்கும் இன்னும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் உள்ளது. இதனால் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தகுதி உள்ள பெண்கள் அனைவரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் மகளிர் உரிமை தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களின் நிலை என்னவென்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனிடையே விடுபட்ட அனைத்து பெண்களுக்கும் இன்னும் இரண்டு மாதங்களில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி உறுதி அளித்துள்ளார். டிசம்பர் மாதத்தில் புதிய பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விண்ணப்பதாரர்களின் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
