தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதேசமயம் அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது. இதனை சட்டரீதியாக எப்படி கையாளுவது என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் உள்ளார். அதேசமயம் விஜய்க்கு இந்த விஷயத்தில் ஆதரவாக செயல்பட்டு அவரை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக இபிஎஸ் கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பு இருந்த நிலையில் NDA கூட்டணியில் விஜய் கட்சி இணையுமா என அண்ணாமலை இடம் கேட்கப்பட்டது. இரண்டு கட்சிகளின் சித்தாந்தங்களும் வேறு வேறு பாதையில் உள்ள போது, எப்படி ஒரே நேர்கோட்டில் பயணிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதே சமயம் தேர்தலுக்கு காலம் உள்ளதால் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அண்ணாமலை சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இதனால் NDA கூட்டணியில் விஜய் இணைவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
