கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமண்ணா. இவரது மனைவி சுவாதி. இந்த தம்பதியினருக்கு 12 வயதில் மகள் இருந்துள்ளார். கடந்த 2- ஆம் தேதி இரவு ராமண்ணா நைட் ஷிப்ட் வேலைக்கு சென்ற பிறகு சுவாதி தனது மகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். இரவு 10.30 மணிக்கு ராமண்ணாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சிறுமி அம்மா மருந்து சாப்பிட்ட பிறகு அசாதாரணமாகவும், அமைதி இன்றியும் இருக்கிறார்.
எனக்கு பயமாக இருக்கிறது என கூறியுள்ளார். அதற்கு ராமண்ணா அதெல்லாம் ஒன்றும் இல்லை. பயப்படாமல் இரு. நான் காலையில் வந்து விடுகிறேன் என மகளுக்கு தைரியம் கூறியுள்ளார். மறுநாள் காலை பணி முடிந்து வீட்டிற்கு சென்ற போது நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. இதனால் ராமண்ணா கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து போது தனது 12 வயது மகள் ரத்த வெள்ளத்தில் சடலமாகவும், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது மனநலம் பாதிக்கப்பட்ட சுவாதி தனது மகளை கத்தி மற்றும் கத்திரியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடல் மீது ஏறி நின்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
