கோயம்புத்தூர் மாவட்டம் சிவானந்தபுரம் வேல்முருகன் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராம்குமார் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் பவானிசாகர் பகுதிக்கு காரில் சென்றுள்ளார். அவர்கள் கீழ் பவானி வாய்க்காலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது நீச்சல் தெரியாததால் ராம்குமார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் அந்த பகுதி மக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராம்குமாரை தேடி பார்த்தனர். நேற்று காலை 2-வது நாளாக ராம்குமார் தேடும் பணி நடைபெற்றது. அப்போது சத்தியமங்கலம் உக்கரம் பகுதியில் குப்பன் துறை அருகே ஒதுங்கி கிடந்த ராம்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
