திருச்சி நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர்.
தென்காசியை சேர்ந்தவர் ஜோசப், சென்னையில் வாடகை கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருடன், இவரது நண்பர் செல்வகுமார், அவரது மனைவி யசோதா, இவர்களது ஒன்றரை வயது குழந்தை அனோனியா மற்றும் வேறொரு நண்பர் விஜயபாபு உள்ளிட்ட 5 பேரும் சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மீண்டும் சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது, இவர்கள் பயணித்த கார் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்து வந்த அனோனியா, யசோதா, விஜயபாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் ஜோசப், செல்வகுமார் ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில், கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.
