தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜித்ரா. இவர் நேற்று தனது தம்பி பொன்செல்வனுடன் ஏரல் பஜார் பகுதிக்கு பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மெயின் பஜார் பகுதியில் கிடந்த ஒரு பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் 6 தங்க மோதிரங்கள் இருந்தது.
உடனே விஜித்ராவும் அவரது தம்பியும் ஏரல் காவல் நிலையத்திற்கு சென்று விவரத்தை கூறி பையை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு தங்கநகை வியாபாரி ஒரு கடையிலிருந்து மற்றொரு கடைக்கு மோதிரத்தை எடுத்துச் செல்லும்போது தவறவிட்டது தெரியவந்தது.
அவரை தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் மோதிரங்களை பத்திரமாக ஒப்படைத்தனர். இதுகுறித்து விசித்ரா கூறும்போது, நாங்கள் பஜாருக்கு பொருட்கள் வாங்க வந்தோம். அங்கு கிடைத்த பையை திறந்து பார்த்தபோது மோதரங்கள் இருந்தது. அதை யாரிடம் கொடுப்பது என யோசித்து பிறகு காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம்.
நாம் பிறரது பொருட்களை எடுக்க நேரிட்டால் நாளைக்கு நம்முடைய பொருட்களையும் தொலைக்க நேரிடும். கவனமாக இருக்க வேண்டும். தற்போது போலீசாரின் தீவிர முயற்சியால் உரியவரிடம் அந்த பொருள் ஒப்படைக்கப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது என விசித்திரா கூறியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
