தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக விடுபட்ட குடும்ப தலைவிகள் அனைவரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கிய முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து ஆகஸ்ட் 28ஆம் தேதி விவரங்கள் வெளியாகும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிதாக திட்டத்தில் இணைபவர்களுக்கு பணம் வரவு வைப்பது தொடர்பான அறிவிப்பை செப்டம்பர் 15ஆம் தேதி அரசு வெளியிடும் என்று கூறப்படுகிறது.
