தமிழகத்தில் ரேஷன் அட்டை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக இந்த திட்டம் சோதனை ரீதியாக வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் சென்னை, நெல்லை, சிவகங்கை மற்றும் தர்மபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தொடங்குகின்றது. ஆதார் அட்டையை சரிபார்த்த பிறகு தான் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
