தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவதற்கு ஏதுவாக இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை தமிழக அரசானது செயல்படுத்தி வருகிறது. இந்த பஸ் பாஸ் வழங்கும் திட்டமானது 1996–97ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆட்சிகளிலும் இத்திட்டம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டது. இதனால் மாணவர்களுக்கு விரைந்து இலவச பஸ் பாஸ் வழங்க ஏதுவாக எமிஸ் தளத்தில் உள்ள மாணவர்கள் விவரங்களை சரிபார்த்து அனுப்பும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிக்கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இலவச பஸ் பாஸ் இந்தாண்டில் எமிஸ் தளத்தில் உள்ள விவரம் மூலமே வழங்கப்பட இருப்பதாகவும், அதற்கான பணி நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
