தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான மைல்கல் திரைப்படமாக 2007 ஆம் ஆண்டு வெளியானது பருத்தி வீரன் திரைப்படம். இந்த படத்தில் அறிமுகமான கார்த்தி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். 100 படங்களில் நடித்த ஒரு அனுபவமிக்க நடிகரைப் போன்ற நடிப்பை கார்த்தி தன்னுடைய முதல் படத்திலேயே வெளிப்படுத்தி இருந்தார். அதற்கு இயக்குனர் அமீர்தான் முக்கியக் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
படம் வெளியான போது வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றனர், அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும். ஆனால் பட இந்த பட ரிலீஸூக்குப் பிறகு படத்தில் பணியாற்றிய கலைஞர்களாக அமீர், கார்த்தி மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. அதற்கு முக்கியக் காரணமாக இயக்குனர் அமீருக்கு தரவேண்டிய ஒரு கோடி ரூபாய்க்கு மேலான பணத்தை தராமல் ஞானவேல் ராஜா ஏமாற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அமீர் தொடர்ந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது சம்மந்தமாக அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையே காரசாரமான வாக்குவாதங்கள் அவ்வப்போது நடப்பதும் உண்டு. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டியில் கார்த்தி முதலில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிக்கத் தயங்கினார் எனக் கூறியுள்ளார்.
அதில் “கார்த்திக்கு முதலில் அமீர் இயக்கத்தில் நடிக்க நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அமீர் இயக்கிய ராம் படத்தை நான், கார்த்தி மற்றும் சுதா கொங்கரா ஆகியோர்தான் சென்னையில் பார்த்தோம். அந்த படம் சுதா கொங்கராவுக்கும் பிடிக்கவில்லை. கார்த்திக்கும் பிடிக்கவில்லை. கார்த்தி ‘எனக்கு இப்போதே 27 வயது ஆகிவிட்டது. நான் நடித்தால் அது வெற்றிப்படமாக அமையவேண்டும்.’ என்று நினைத்தார். ஆனால் நாங்கள் எல்லோரும் வற்புறுத்தி சொன்னதால் அதன் பின்னர் கார்த்தி ஒத்துக்கொண்டார்” எனக் கூறியுள்ளார்.
