தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன. ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் விஜயகாந்த் குறித்து நடிகை குஷ்பூ ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது எந்த ஈகோவும் பார்க்காமல் வேலை செய்த ஒரே கலைஞர் என்றால் அது விஜயகாந்த் மட்டும்தான்.

தமிழ் சினிமாவில் பெப்சி பிரச்சனை நடந்து கொண்டிருந்த போது மும்பையில் இருந்து பல தொழில்நுட்ப கலைஞர்கள் வந்திருந்தனர். அவர்கள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நான் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட சிலர் அங்கு சென்று இருந்தோம். ஆனால் அங்கு விஜயகாந்த் சார் அவர ஒரு சேர் கூட வைக்கவில்லை. அங்கிருந்த இந்தி காரர்கள் அனைவரும் பெட்டில் உட்கார்ந்து கொண்டு விஜயகாந்த இவரெல்லாம் ஒரு ஹீரோ என இந்தியில் கிண்டல் செய்தனர். இதனைக் கேட்டவுடன் நான் சண்டைக்குப் போய்விட்டேன். விஜயகாந்த் சார் தான் என்னை பிடித்து விட்டார்.

நமக்கு வேலையாக வேண்டும் சண்டை போடாதே என்று சமாதானம் செய்தார். சார் உங்கள பத்தி தப்பா பேசினா நான் அடிச்சிடுவேன் என்று கூறினேன். இல்லை விட்டுக் கொடு, அவங்களுக்கு என்ன வேண்டும் என்று கேள், நமக்கு பின்னாடி 200 குடும்பங்கள் இருக்கு என்று பேசினார். ஒரு பிரச்சனை என்றால் அதை சமூகமாக கையாண்டு அதை தீர்த்து வைத்து விடுவார். அவரை மாதிரி யாருமே இருக்க முடியாது. திரைத் துறையில் எந்த ஒரு தொழில்நுட்ப கலைஞரும் விஜயகாந்த் எனக்கு ஒரு உதவி கூட செய்யவில்லை என்று சொல்ல மாட்டார்கள் என்று குஷ்பூ சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
