தமிழ் திரை உலகில் நான்கு தலைமுறைகளுக்கு பாட்டு எழுதியவர் தான் கவிஞர் வாலி. இவர் பாட்டு எழுதியதோடு சிறுகதை, கவிதை மற்றும் நடிப்பு என பல்துறை வித்தகராகத்தான் திகழ்ந்தார். அவர் திரைத்துறையில் சுமார் 15,000 பாடல்களை எழுதியுள்ளார். சுமார் 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார். வடை மாலை என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கியிருந்தார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை ஐந்து முறை பெற்ற பெருமைக்குரியவர். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். வெளிநாட்டிற்கு செல்ல எத்தனையோ அழைப்பு வந்தும் வாலி செல்லவில்லை.

இப்படி பல புகழுக்குரிய வாலி 2013 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் இன்றும் அவருடைய பாடல்கள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து வருகின்றன. இந்த நிலையில் வாலி பேசிய ஒரு பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தில் இடம்பெற்ற கப்பலேறி போயாச்சு என்ற பாடலை நான்தான் எழுதினேன். அந்தப் பாட்டை கேட்டதும் அன்னைக்கு நைட்டு ஷங்கர் என் வீட்டுக்கு ஓடோடி வந்தார்.

அண்ணன் நீங்க வர கப்பலேறி போயாச்சுன்னு எழுதி இருக்கீங்க படம் நல்லா வரலனா கப்பலேறி போயாச்சுன்னு நம்மள ஓட்டுவாங்க என்று சொன்னாரு. உடனே நான், அட இதுல என்னப்பா இருக்கு வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்துட்டு கப்பலேறி போயிட்டான் அப்படிங்கிற வார்த்தை தான் நான் இந்த இடத்துல பயன்படுத்தி இருக்கேன். நீ அதை தானே படத்துல வான வேடிக்கை வச்சு காட்ட போற என்று சொன்னதும் இது ஒன்னும் அறச்சொல் இல்ல தானே என்று சங்கர் என்கிட்ட கேட்டார். இது அறச்சொல் எல்லாம் இல்ல முழு சொல் தான் என்று சொன்னதுக்கு அப்புறம்தான் அந்த பாட்டுக்கு அவர் ஒப்புக்கொண்டார் என வாலி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
