தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் துணிகர கொள்ளை சம்பவங்கள், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி ஆர்.எம்.பி.சி காலனியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி லட்சுமி (53). இவர்களது மகன் பாண்டித்துரை காவலராகவும், மகள் லாவண்யா தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறையில் கணினி விவர பணியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த அரசு ஊழியர் குடும்பத்தினர், தங்களது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வேளாங்கண்ணிக்கு வீட்டை பூட்டிவிட்டுச் சென்றிருந்த நிலையில், இந்த அதிர்ச்சிக்குரிய திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடும்பத்தினர் வெளியூர் சென்றுவிட்டு சில நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி அலமாரி (பீரோ) உடைக்கப்பட்டிருந்தது. அதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நெக்லஸ், செயின், தோடு, வளையல் உள்ளிட்ட 91 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை நன்கு நோட்டமிட்டு, மர்ம கும்பல் திட்டமிட்டு இந்த கைவரிசையைக் காட்டியுள்ளது. இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தேனி அருகே உள்ள தப்புகுண்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மில்லிலும் மற்றொரு திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் சிவக்குமார் (55) என்பவர், மில்லில் இருந்த வாட்டர் பம்ப் மற்றும் மின்மோட்டார் உள்ளிட்ட 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயுள்ளதாக வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். தேனி பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இத்தகைய தொடர் கொள்ளைச் சம்பவங்கள், மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பையும், காவல்துறையினர் இரவு நேர ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுக்கச் செய்துள்ளது.
