பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவின் சிறை அறையிலிருந்து ஸ்மார்ட்போன், சார்ஜர், பென்டிரைவ் மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய குறிப்பேடு ஆகியவை சோதனை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மத்திய குற்றப்பிரிவு (CCB) அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் போது இந்தத் தடைசெய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் சிறை வளாகத்தினுள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, விஐபி கைதிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு வசதிகள் மற்றும் சிறையின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த பலத்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ரேவண்ணாவின் போனில், 90 ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக சிறைக்குள் போன் வைத்திருந்தது சர்ச்சையானது. இந்நிலையில், அவரது போனை கைப்பற்றிய அதிகாரிகள், அதில் 80-90 ஆபாச வீடியோக்கள், ஆபாச போட்டோக்கள் இருந்ததை கண்டறிந்தனர். வீட்டில் வேலை செய்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் பிரஜ்வால் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
கைப்பற்றப்பட்ட ஸ்மார்ட்போனில் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஓடிடி (OTT) செயலிகள் பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட குறிப்பேட்டில் ரேவண்ணாவின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் பல தொலைபேசி எண்கள் இருந்துள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கடமை தவறியதாக உதவி சிறைக் கண்காணிப்பாளர் இரன்னா ரங்கபூர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், சிறைக் கண்காணிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது அறை தோழர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஸ்மார்ட்போன் எவ்வாறு சிறைக்குள் கொண்டு வரப்பட்டது, அதற்கு உதவிய அதிகாரிகள் யார் என்பது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் இயங்கும் ஜாமர்களையும் மீறி குறிப்பிட்ட பிராண்ட் செல்போன் பயன்படுத்தப்பட்டது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
