“வயிற்று வலி என சென்ற சிறுமி”… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை….!

By Nanthini on மாசி 17, 2026

Spread the love

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி – மலர்க்கொடி தம்பதியினர், நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாத நிலையில் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இருவரும் வேலைக்குச் சென்றதால், அந்தச் சிறுமி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். விடுமுறை நாட்களில் மட்டும் திருவண்ணாமலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்வதை அந்தச் சிறுமி வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கடந்த வாரம் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, சிறுமிக்குத் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்திற்கும், சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

   

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடியாத்தம் தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த கமலேஷ் என்ற கட்டிட மேஸ்திரி, சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து, போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கமலேஷைக் கைது செய்தனர். ஆனால், காவல் நிலையத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கமலேஷ் அங்கிருந்து தப்பியோடினார்.

   

தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில், கமலேஷ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் அங்கு விரைந்தனர். பெங்களூர் கே.ஆர். புரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்துகொண்டிருந்த கமலேஷை மடக்கிப் பிடித்த போலீசார், அவரை மீண்டும் குடியாத்தம் அழைத்து வந்து சிறையிலடைத்தனர். ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.