அமேசான் நிறுவனம் 2025ஆம் ஆண்டில் உலகளவில் உள்ள தனது டேட்டா சென்டர்களைக் குளிர்விப்பதற்காக 946 கோடி லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக டேட்டா சென்டர்களின் எண்ணிக்கையும், அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கமும் உலகளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. எனினும், மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் தங்களின் தண்ணீர் பயன்பாடு மிகவும் குறைவுதான் என்று அமேசான் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், அமேசான் நிறுவனம் தனது நீர் பயன்பாட்டுத் திறனை கணிசமாக மேம்படுத்தி வருகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டில் ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 0.15 லிட்டராக இருந்த தண்ணீர் பயன்பாட்டு அளவு, தற்போது மேலும் குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு மத்தியில், குறைந்த அளவு தண்ணீரைத் தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக, கடுமையான நீர் பற்றாக்குறை நிலவும் பிராந்தியங்களில் தண்ணீரைச் சேமிக்க அமேசான் மாற்று வழிகளைக் கையாண்டு வருகிறது. உதாரணமாக, அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் பகுதி மற்றும் சவூதி அரேபியா போன்ற வறண்ட பிராந்தியங்களில் உள்ள டேட்டா சென்டர்களில், பாரம்பரியக் குளிரூட்டும் முறைகளுக்குப் பதிலாக தண்ணீரே தேவைப்படாத அல்லது மிகக் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தும் நவீனக் குளிரூட்டும் தொழில்நுட்பங்களை அமேசான் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
