கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் 88 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மகன்களை இழந்து மருமகளுடன் வசித்து வந்த அந்த மூதாட்டி, வீட்டில் தனியாக இருந்த சமயம் பார்த்து மர்ம நபர் ஒருவரால் வாயில் துணி அமுக்கப்பட்டு கொடூரமான முறையில் சீரழிக்கப்பட்டுள்ளார். வேலை முடிந்து திரும்பிய மருமகள், மூதாட்டி மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சுயநினைவு திரும்பிய மூதாட்டி தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறியதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
சம்பவம் தொடர்பாக வடசேரி போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய ஒரு சிறுவனைப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவனே இந்த வக்கிரச் செயலில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து அந்த மாணவனைக் கைது செய்த போலீசார், அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மிகவும் வயதான ஒரு மூதாட்டியிடம் பள்ளி மாணவன் காட்டிய இந்த வக்கிர புத்தி சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
