நாட்டில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தமிழகத்தில் நடக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நெஞ்சை பதற வைக்கிறது. சமீபத்தில் கூட கோயம்புத்தூரில் 19 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் கும்பகோணத்தில் நடந்துள்ளது. கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் தனது சகோதரிக்கு குழந்தை பிறந்துள்ளதால் பெண் ஒருவர் துணைக்கு வந்து மருத்துவமனையில் தங்கி உள்ளார். அப்போது அவருடைய கணவரும் ஆறு வயது பெண் குழந்தையும் உடன் வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த ஆறு வயது சிறுமி தன்னுடைய தந்தையுடன் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனை காத்திருப்பு அறையில் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது அருகில் படுத்திருந்த கொத்தனார் தினேஷ் (31) என்ற நபர் தந்தையுடன் படுத்திருந்த ஆறு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். தந்தை படுத்திருக்கும் போதே இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
