ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் அருகே உள்ள பஜ்தோ கிராமத்தில், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பானிபூரியைச் சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் வீடு வீடாகச் சென்று பானிபூரி விற்பனை செய்த நபரிடம் வாங்கிச் சாப்பிட்ட 18 பேருக்குக் கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது சர்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பானிபூரி சாப்பிட்ட சில நேரத்திலேயே சிறுவன் உட்பட அனைவருக்கும் அதிதீவிரமான காய்ச்சல், தாங்க முடியாத வயிற்று வலி, வாந்தி மற்றும் பேதி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதில் சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அந்தச் சிறுவனின் மறைவு அவனது பெற்றோரை மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுகாதாரமற்ற உணவுப் பொருட்களால் ஒரு உயிர் பறிபோனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பானிபூரி விற்பனையாளர் யார் என்பது குறித்தும், உணவுப் பொருட்கள் எங்கே, எப்படித் தயாரிக்கப்பட்டன என்பது குறித்தும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தெருவோர உணவுகள் மற்றும் நடமாடும் விற்பனையாளர்களிடம் உணவு வாங்கும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
