ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ஒரே இரவில் உக்ரைன் அனுப்பிய 555 ஆளில்லா விமானங்களை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும், அதில் மாஸ்கோ பகுதியில் மட்டும் 180 விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகவும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். இந்த அதிரடித் தாக்குதலில் மாஸ்கோவின் கபோட்னியா பகுதியில் உள்ள காஸ்ப்ரோம் நெப்ட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன்கள் மோதி வெடித்ததில், அங்குள்ள தொட்டிகள் தீப்பற்றி எரிந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இந்த வாரத்தில் மட்டும் இந்த எண்ணெய் ஆலை மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அதன் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளன. மேலும், மாஸ்கோவின் மிகப்பெரிய வணிக வளாகமான சடோவோட் வர்த்தக மையம் அருகேயும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடமும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இந்தத் தொடர் ட்ரோன் அச்சுறுத்தல் காரணமாக மாஸ்கோவில் உள்ள நான்கு முக்கிய விமான நிலையங்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலை உறுதிப்படுத்திய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு இது ஒரு “நியாயமான பதிலடி” என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
