ஆந்திர மாநில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 51 மருத்துவர்கள், எவ்வித முன்னறிவிப்புமின்றி நீண்டகாலமாகப் பணியில் ஈடுபடாமல் இருந்த காரணத்திற்காக நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார் யாதவ் இது குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்வி இயக்குனரக (DME) அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இவர்களின் தொடர் விடுப்பு உறுதி செய்யப்பட்டது.
பணியில் இல்லாத இந்த மருத்துவர்களுக்குத் தங்களின் விளக்கத்தை அளிக்கப் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு, முறைப்படி விளக்கக் கடிதங்களும் அனுப்பப்பட்டன. இருப்பினும், அவர்களிடமிருந்து எந்தவிதமான முறையான பதிலோ அல்லது உரிய காரணங்களோ தெரிவிக்கப்படவில்லை. கடமை தவறியவர்கள் மீது சமரசம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசின் கொள்கையின் அடிப்படையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குத் தடையின்றி மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்யவும், அரசுப் பணியில் ஒழுக்கத்தைப் பேணவும் இந்த நடவடிக்கை அவசியமானது என அமைச்சர் தெரிவித்தார். தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பணியில் இல்லாதது பொதுமக்களுக்கான சேவையைப் பாதிக்கும் என்பதால், காலியாக உள்ள இந்தப் பணியிடங்களை விரைந்து நிரப்பவும், வருங்காலங்களில் இது போன்ற அத்துமீறல்களைக் தவிர்க்கவும் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
