கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கணவன் மற்றும் 5 வயது மகன் ஆகிய இருவர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் அபிநந்தன் மற்றும் அவரது 5 வயது மகன் எனக் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று இந்த குடும்பத்தினர் உறவினர்களின் வீட்டிற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த பிறகு, அபிநந்தனுக்கும் அவரது மனைவி ஹரிணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இரவில் இருவரும் தனித்தனி அறைகளில் தூங்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மறுநாள் காலையில் அபிநந்தன் மற்றும் அவரது 5 வயது மகன் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் வீட்டின் உள்ளேயே சடலமாகக் கிடந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மர்ம மரணம் தொடர்பாகக் கணவன் மற்றும் மகனுடன் ஒரே வீட்டில் இருந்த மனைவி ஹரிணியைச் சந்தேக வளையத்தில் கொண்டு வந்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
