தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அண்மையில் நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகளின்போது ஏற்பட்ட தேர்வு மைய குளறுபடிகள் தொடர்பாக அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், கடமை தவறியதாகக் கருதப்படும் 5 உயர் அதிகாரிகளைத் தற்காலிகப் பணிநீக்கம் (Suspension) செய்து நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் உதவிப்பிரிவு அலுவலர்கள், பிரிவு அலுவலர்கள் மற்றும் சார் செயலாளர் உள்ளிட்டோர் அடங்குவர்.
மேலும், இந்த விவகாரத்தில் ஒரு துணைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் பாயந்துள்ளது. வினாத்தாள்கள் வரிசை மாறியது மற்றும் தேர்வு தொடங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாகத் தேர்வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளான நிலையில், இந்த நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், தவறுகள் இழைத்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
