ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவப் பரிசோதனை மையத்தில், உறைவிப்பான் பெட்டியில் பாலித்தீன் பைகளில் சுற்றப்பட்டிருந்த ஐந்து மனிதத் தலைகள் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டன. உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த உடல் பாகங்கள், சர்வதேச அளவில் செயல்படும் சட்டவிரோத உடல் உறுப்பு விற்பனை கும்பலுடன் தொடர்புடையது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.
ஆராய்ச்சி மையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இந்த இடத்தில், இறந்தவர்களின் உடல்களை அனுமதி இன்றி சிதைத்து, அவற்றின் பாகங்களை ‘டார்க் வெப்’ இணையதளம் மூலம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்றுவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தடயவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, கைப்பற்றப்பட்ட தலைகள் அண்மையில் இறந்தவர்களுடையது மற்றும் அவை சமீபத்தில் துண்டிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக மருத்துவ மையத்தின் மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத் தானம் அல்லது மர்மமான முறையில் இறந்தவர்களின் உடல்கள் விற்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம், ஆராய்ச்சி மையங்களில் கூடுதல் கண்காணிப்பின் அவசியத்தை உணர்த்தியுள்ளது.
