ஒடிசா மாநிலம் காசிபூர் பிளாக் பைகனகுடா என்ற கிராமத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு அந்த பெண்ணின் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வேறு கிராமத்திற்கு சென்றுள்ளார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் சமூகத்தினர் மற்றும் கிராமத்தினர் இதை அவமானமாக நினைத்து அந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 40 பேரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள்.
மேலும் மீண்டும் கிராமத்துக்கே சேர்க்க வேண்டும் என்றால் சுத்திகரிப்பு சடங்கு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து கிராமத்து கோவில் முன்பு கால்நடைகளை பலியிட்டு அந்த குடும்பத்தை சேர்ந்த 40 பேரும் மொட்டை அடிக்கப்பட்டார்கள். அதற்கு பிறகு அந்த குடும்பத்தினர் கிராமத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் . அந்த 40 பேர் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் வயல்வெளியில் அவர்கள் அமர்ந்திருக்கும் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
