ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் உள்ள முசுமகாபடா கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் பிரதான் என்பவருக்கு நான்கு வயதுடைய பிகில் பிரதான் என்ற மகன் இருந்துள்ளான். இந்த நிலையில் ரஞ்சித் தனது மகனுக்காக வாங்கி வந்த சிப்ஸ் பாக்கெட்டில் சிப்ஸுடன் ஒரு சிறிய பொம்மைத் துப்பாக்கியும் இருந்துள்ளது.
நேற்று முன்தினம் பெற்றோர்கள் சற்று தொலைவில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சிறுவன் அந்த பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென அந்த பொம்மையை விழுங்கினான். அவன் அழுவதைக் கண்ட பெற்றோர்கள், வாயிலிருந்த பொம்மையை அகற்ற முயன்றும் முடியவில்லை.
உடனடியாக, சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாரிங்பாடி சுகாதார மையத்திற்குச் சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனின் சுவாசப் பாதையை அந்தச் சிறிய பொம்மை அடைத்ததால், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே அவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து இதுவரை முறையான புகார் எதுவும் வரவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
