ஐயோ இப்படியா உயிர் போகணும்?… குளிருக்கு இதமாக வீட்டில் தீ மூட்டி குடும்பத்தினர்… இரவோடு இரவாக மூச்சு திணறி 4 பேர் உயிரிழந்த சோகம்…!

By Nanthini on மார்கழி 28, 2025

Spread the love

உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் குளிரின் தாக்கம் என்பது அதிக அளவில் உள்ளது. இந்த குளிரிலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். இதனிடையே பீகார் மாநிலம் சரண் மாவட்டம் ஷப்ரா பகுதியை சேர்ந்த எட்டு பேரை கொண்ட குடும்பத்தினர் அதிக குளிரிலிருந்து தப்பிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் தீ மூட்டி உள்ளன. வீட்டில் உள்ள ஒரு அறையில் தீ மூட்டி அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு உறங்கியுள்ளனர்.

அப்போது நெருப்பில் இருந்து வெளியேறிய புகையால் தூங்கிக் கொண்டிருந்த அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மயங்கி விழுந்துள்ளனர். காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு குடும்பத்தினர் எட்டு பேரும் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

   

உடனே அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அதில் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மீதமுள்ள நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.