உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூரில், 95 வயதான பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது 35 பேரன்மார்கள் இணைந்து அவரை பல்லக்கில் சுமந்து கன்வாட் யாத்திரை மேற்கொண்டு வரும் சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. ஹரித்வார் சென்று கங்கையில் புனித நீராடி கன்வாட் யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்பது அந்த மூதாட்டியின் நீண்ட நாள் விருப்பமாக இருந்துள்ளது. பாட்டியின் இந்த ஆசையை நிறைவேற்ற உறுதிபூண்ட அவரது பேரன்மார்கள், அவரைப் பல்லக்கில் அமர வைத்துத் தங்களது தோள்களில் சுமந்தபடி பயணத்தைத் தொடங்கினர்.
இந்த நெகிழ்ச்சியான யாத்திரையைக் கண்ட உத்தரப்பிரதேசக் காவல் துறையினர், மூதாட்டி மற்றும் அவரது பேரன்மார்களின் பாதுகாப்பான பயணத்திற்காகத் தேவையான பாதுகாப்பு உதவிகளையும் வழங்கியுள்ளனர். பேரன்களின் இந்த அளவற்ற அன்பும் அர்ப்பணிப்பும் இணையத்தில் வெளியாகிப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
