தென்காசி மாவட்டம் மருதம்புத்தூர் மீனாட்சிபுரம் தெருவை சேர்ந்தவர் பிரேம் சரண். இவரது மனைவி முத்துலட்சுமி. கடந்த சில மாதங்களாக பிரேம் சரண் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் முத்துலட்சுமி தனது தாத்தா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முத்துலட்சுமி எழுதிய 8 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
ஆலங்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் முத்துலட்சுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். சக்திவேல் முத்துலட்சுமிக்கு தெரியாமல் தனிமையில் இருந்ததை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் உறவினர்கள் கண்டித்ததால் முத்துலட்சுமி சக்திவேலுடன் பேசுவதை நிறுத்தினார்.
இதனால் கோபமடைந்த சக்திவேல் உல்லாச போட்டோ மற்றும் வீடியோவை காட்டி மிரட்டி முத்துலட்சுமியிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் வரை பணத்தை பறித்துள்ளார். மேலும் சக்திவேல் நண்பர்களான முருகேசன், முத்துராஜ் ஆகியோர் தங்களது ஆசைக்கு இணங்கி வருமாறு முத்துலட்சுமியை தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சக்திவேல், முத்துராஜ், முருகேசன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
