கர்நாடக மாநிலம் பெங்களூர் புறநகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர். இந்நிலையில் ஆனந்த் அண்ணன் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். பிறகு ஆனந்துக்கும் அவருடைய அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் தம்பதி அங்கிருந்து வெளியேறி தனியாக ஒரு வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மஞ்சுளா கர்ப்பமான நிலையில் அவரை கவனிக்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் முன் வரவில்லை.
ஆனந்துக்கும் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமலும் கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் மருந்துகளை வாங்கிக் கொடுக்க முடியாமலும் இருந்துள்ளார். இதனை அறிந்த ஆஷா ஊழியர்கள் மஞ்சுளாவை கவனித்து உரிய சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தனர். ஆனால் அதற்கு மஞ்சுளா சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் திடீரென மஞ்சுளாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில் சில நிமிடங்களிலேயே மூன்று குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
