இந்தியாவில் மருத்துவ கல்வி கனவுகள் பல மாணவர்களின் வாழ்க்கையை நாளுக்கு நாள் பாதித்துக்கொண்டு தான் இருக்கின்றன. பெற்றோர்களின் எதிர்பார்ப்பு மற்றும் சமூக அழுத்தங்கள் காரணமாக மாணவர்கள் மன அழுத்தத்தில் சிக்கி துரதிஷ்டவசமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டது. அப்படிதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சந்திர போரில் 19 வயதான அனுராக் அணில் போர்கார் என்ற மாணவர் கல்லூரியில் சேர வேண்டிய நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டு NEET UG தேர்வில் 99.99% மதிப்பெண் பெற்று வெற்றி பெற்று அந்த மாணவர் 1475 வது ரேங்க் பெற்று உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பதற்கான சீட்டை வாங்கியுள்ளார். இந்த மாணவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தில், அம்மா எனக்கு டாக்டராக விருப்பமில்லை, நான் சாகப் போறேன் என்று மாணவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். 19 வயதாகும் இந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பியதாகவும் ஆனால் குடும்பத்தினர் இந்தியாவில் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது மாணவரின் மன அழுத்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையில் தெரிவிக்கின்றன. தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் நீட் தேர்வு காரணமாக மருத்துவ மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டது வேதனை அளிக்கிறது
