பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை டிகிரி முடித்து, வங்கித் துறையில் குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழகத்தின் உள்ளூர் மொழியான தமிழில் எழுத, பேச மற்றும் வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு, உள்ளூர் மொழித்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் ஆகிய நிலைகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 7 ஆகும். கூடுதல் தகவல்கள், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறையை அறிய பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தைப் பார்வையிடலாம்.
