2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதற்காக ரூ. 300 கோடி செலவில் இலவச வேட்டி, சேலைகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு தற்போதே நிதியொதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், புதிய தமிழக வெற்றிக் கழக அரசிலும் பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் எவ்விதத் தடையுமின்றித் தொடர்வது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில், பண்டிகைக்கு மிகக் கடைசி நேரத்தில் நிதி ஒதுக்கப்பட்டதால் அவசர அவசரமாகக் கொள்முதல் செய்யப்பட்டு, மக்களுக்குத் தரமற்ற வேட்டி, சேலைகள் விநியோகிக்கப்பட்டதாகப் பரவலான புகார்கள் எழுந்தன. அந்தத் தவறுகளையும் குளறுபடிகளையும் முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, இந்த முறை நடப்பு அரசு தொலைநோக்குப் பார்வையுடன் சுமார் 6 மாதங்களுக்கு முன்பாகவே கொள்முதல் மற்றும் உற்பத்திப் பணிகளைத் திட்டமிட்டுத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையேயும் நெசவாளர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
