சிவகங்கை மாவட்டம் மானகிரி பகுதியைச் சேர்ந்த 52 வயது ராமகிருஷ்ணன் என்பவர், தன்னை ஒரு ஜோதிடர் என்று கூறிக்கொண்டு ஆன்மீகச் சடங்குகளைச் செய்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு, தனது 17 மற்றும் 14 வயது மகள்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு தாய் இந்த ஜோதிடரை அணுகியுள்ளார். ஜோதிடமும் பரிகாரமும் பலன் தரும் என நம்பிய அந்தத் தாய், ராமகிருஷ்ணனின் அறிவுரைப்படி தனது மகள்களுடன் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பரிகாரப் பூஜை நடைபெறும் நாளில், அந்தப் பெண்ணைத் தந்திரமாக ஒரு அறையில் அமர வைத்து, அங்குள்ள விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்ளுமாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். பின்னர், இரண்டு சிறுமிகளையும் தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, எவ்வித அச்சமுமின்றி அவர்களுக்குப் பாலியல் ரீதியாகக் கடும் கொடுமைகளை இழைத்துள்ளார். இச்சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து, சிறுமிகளுக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளைத் தொடர்ந்து மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றபோதுதான், ஜோதிடரின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்தது.
இது குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராமகிருஷ்ணனை உடனடியாகக் கைது செய்தனர். சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல் முருகன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்த ராமகிருஷ்ணனுக்கு, ஒவ்வொரு சிறுமிக்கும் தலா 100 ஆண்டுகள் வீதம் மொத்தம் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது.
மேலும், குற்றவாளிக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 20 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். ஆன்மீகம் மற்றும் நம்பிக்கையைப் பயன்படுத்தி பிஞ்சுக் குழந்தைகளைச் சீரழிக்கும் இத்தகைய நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த மிகக்கடுமையான தண்டனை, சமூகத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஒரு தகுந்த எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
