திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பகுதியில் சுதாகர் மகன் பரசுராம் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் மன்னார்குடி அருகே உள்ள ராமபுரம் தெருவை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காயத்ரி கோபித்துக் கொண்டு அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு வடகோவநூரில் இருந்து தன்னுடைய மோட்டார் சைக்கிளில் பரசுராம் லட்சுமாங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கோரையாறு பாலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பரசுராமை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரசுராம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆன மூன்று மாதத்தில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
