குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த ஜவுளி கடை உரிமையாளர் சந்தீப் கவுட் என்பவருக்கு வர்ஷா என்ற மனைவி உள்ளார். வர்ஷாவின் சகோதரர் நிஸ்சய் காஷ்யப். சகோதரி மம்தா. இதனிடையே வர்ஷாவின் சகோதரருக்கு டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற முடிவாகி இருந்தது. இதற்காக பிரயாக்ராஜ் நகரில் இருந்து அவர் தனது சகோதரி மம்தா மற்றும் தாயார் சகுந்தலா தேவி ஆகியோருடன் சூரத் நகருக்கு துணி எடுக்க வந்துள்ளார். ஆனால் மம்தாவை இரண்டாவது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தீப் இருந்துள்ளார். இதனை அவரே பலமுறை நேரடியாக கூறிவந்துள்ளார். ஆனால் அதற்கு சகோதரர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருமணத்திற்கு துணி எடுக்க வந்தபோது அவர்களிடம் இது தொடர்பாக பேசி சந்தீப் தகராறு செய்துள்ளார். இதில் திடீரென்று கத்தியை எடுத்து தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். சகுந்தலா தேவி காயமடைந்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தீப்பை கைது செய்துள்ளனர். ஏற்கனவே சந்தீப் சகோதரரும் வர்ஷாவின் மற்றொரு சகோதரியை திருமணம் செய்துள்ள நிலையில் தற்போது சந்தீப் இரண்டாவது சகோதரியை திருமணம் செய்ய முயற்சித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
