திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் 17 வயது சிறுமி ஒருவர் கருவை கலைக்க முயற்சித்த போது உடல்நிலை மோசம் அடைந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் அந்த 17 வயது சிறுமி. சில மாதங்களுக்கு முன்பு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து பெற்றோரிடம் கூறாமல் இருந்ததாகவும் 7 மாதம் ஆனபோதுதான் பெற்றோருக்கு விஷயம் தெரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து கருவை கலைப்பதற்கு நாட்டு மருந்துகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த 24ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமி கர்ப்பமானதற்கு காரணமான நபர் யார்? நாட்டு மருந்து வழங்கியவர் யார்? என்று குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
