உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தின் பலுவா கிராமத்தில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கும் வகையிலான ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய அமித் குப்தா, அவரது மனைவி ரஞ்சனா (32), 3 வயது மகன் ரேயான்ஷ் மற்றும் 9 வயது வளர்ப்பு மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்களுடன் அமித் குப்தாவின் 16 வயது தம்பியும் அதே வீட்டில் தங்கியிருந்த நிலையில், குடும்பத்தில் சொத்து மற்றும் அவர்களுக்குச் சொந்தமான மளிகைக் கடை தொடர்பாக அண்ணன் தம்பியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் குடும்பத் தகராறுக்கு இடையே, 16 வயது சிறுவனுக்குத் தொடர்ந்து படிக்க அனுமதி மறுக்கப்பட்டதோடு, வீட்டில் போதிய கவனிப்பும் கிடைக்கவில்லை என்ற கடுமையான மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. அமித் குப்தா தனது தம்பியைப் பள்ளிக்கு அனுப்பாமல், தங்களுக்குச் சொந்தமான மளிகைக் கடையிலேயே வைத்து வேலை வாங்கி வந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் தன்னை முழுமையாகப் புறக்கணிப்பதாகவும், தனது அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் உடைகளைக் கூட சரிவர வழங்காமல் கொடுமைப்படுத்துவதாகவும் அச்சிறுவன் நீண்ட நாட்களாகப் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நீண்டகாலப் புறக்கணிப்பும், ஏமாற்றமும் அச்சிறுவனின் மனதில் விபரீத எண்ணத்தை விதைத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை நேரத்தில் வீட்டில் அனைவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, கடுமையான மன அழுத்தத்தில் இருந்த அச்சிறுவன் தனது அண்ணன் மற்றும் அண்ணியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்துக்கொண்டு அண்ணனின் அறைக்குச் சென்ற சிறுவன், முதலில் அமித் குப்தாவைச் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர், அவரது அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அண்ணி ரஞ்சனாவையும், அருகில் தூங்கிக் கொண்டிருந்த 3 வயதுக் குழந்தை ரேயான்ஷையும் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது அதே அறையில் இருந்த 9 வயது வளர்ப்பு மகள் இச்சம்பவத்தைக் கண்முன்னே பார்த்துக் கதறிய நிலையில், அவரை மட்டும் சிறுவன் தாக்காமல் விட்டுவிட்டான்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கிருந்த 16 வயது சிறுவனைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, அவன் கதறியபடி, “எனக்கு இரண்டு நாட்களாகச் சாப்பாடு தரவில்லை. அந்த ஆத்திரத்தில்தான் இதைச் செய்துவிட்டேன். சிறையிலாவது எனக்குச் சரியான நேரத்திற்குச் சாப்பாடு கிடைக்குமா?” எனக் கேட்டு போலீசாரையே உரைய வைத்துள்ளான். குடும்பத்தினரின் தொடர் புறக்கணிப்பு, கல்வி மறுப்பு, சொத்து விவகாரம் மற்றும் நீண்டகால மன அழுத்தம் ஆகியவை சிறுவனின் மனநிலையை முழுமையாகப் பாதித்திருக்கலாம் என்ற கோணத்திலும், அவனுக்கு ஏதேனும் மனநலப் பிரச்சினைகள் இருந்ததா என்ற அடிப்படையிலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
