புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி யமுனாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காதலியைச் சந்திப்பதற்காக முருகன் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில், முருகன் அந்த வீட்டிற்குள்ளேயே மர்மமான முறையில் பிணமாகக் கிடந்துள்ளார். முருகன் சடலமாகக் கிடந்ததைப் பார்த்த சிறுமி யமுனா, கொஞ்சமும் பதற்றமின்றி அவரது பிணத்தைச் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, முருகனின் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
சடலத்தின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முருகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காதலியின் வீட்டை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் கலவர சூழ்நிலை உருவானது. தகவலறிந்து வந்த அறந்தாங்கி போலிஸார், முருகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டாரா அல்லது விஷம் கொடுத்துக் சாகடிக்கப்பட்டாரா என்ற கோணத்தில், காதலி யமுனா, அவரது தாயார் பெரியநாயகி மற்றும் தாய்மாமன் செல்வம் ஆகிய 3 பேரை போலிஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
