மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனியார் முதியோர் இல்லம் ஒன்றில், 14 வயது சிறுவன் ஒருவன் அங்கு தங்கியிருந்த முதிய பாட்டிகளைத் தடியால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு முதியவர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, அச்சிறுவன் கையில் தடியுடன் அங்கு உறங்கிக் கொண்டிருந்த முதியவர்களைத் தாக்கியுள்ளான். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அச்சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்பதும், ஐந்து மாதங்களுக்கு முன்பு தனது தாயுடன் அங்கு வந்த நிலையில், தாய் உயிரிழந்ததால் அங்கேயே தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உரிய அனுமதியின்றி இயங்கி வந்த அந்த முதியோர் இல்லத்தை அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். அங்கு தங்கியிருந்த முதியோர்கள் மாற்று காப்பகங்களுக்கும் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டு வரும் நிலையில், அச்சிறுவனுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டுச் குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
