சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கருத்தானூரைச் சேர்ந்த சத்யா (30), தனது கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஓமலூரில் உள்ள தனியார் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்த சத்யாவிற்கும், அங்கு மேலாளராகப் பணிபுரிந்த கருப்பூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது திருமணத்தை மீறிய உறவாக மாறிய நிலையில், கடந்த மூன்று மாதங்களாக சத்யா அவரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. சத்யா வேறொருவருடன் பழகத் தொடங்கியதே இந்த விரிசலுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், நேற்று நள்ளிரவு சத்யாவின் வீட்டிற்குச் சென்று அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், அங்கிருந்த கத்தியை எடுத்து சத்யாவைத் தாக்க முயன்றுள்ளார். அப்போது தனது தாயைக் காப்பாற்ற 10 வயது சிறுவன் கிஷாந்த் குறுக்கே வந்து தடுத்துள்ளான். இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சக்திவேல், வீட்டின் மின்விளக்கை அணைத்துவிட்டு சிறுவன் என்றும் பாராமல் கிஷாந்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அந்தச் சிறுவன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறுவனைக் கொன்ற கையோடு சத்யாவையும் சக்திவேல் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் சத்யாவின் கை துண்டிக்கப்பட்டு, உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட சக்திவேல், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த சத்யாவை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த ஓமலூர் போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு, தப்பியோடிய சக்திவேலைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்த சக்திவேல், இன்று அதிகாலை சேலம் அருகே கருப்பூர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட பொறாமையும் ஆத்திரமும், ஒரு பிஞ்சு உயிரைப் பறித்ததோடு கொலையாளியின் உயிரையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இச்சம்பவம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
