தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சுயதொழில் தொடங்க ஆர்வம் காட்டுவது தெரிய வந்துள்ளது. தமிழக பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகரிக்கும் நோக்கத்தோடு அடுத்த ஐந்து வருடங்களில் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்கும் திட்டத்தை தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும் தொழில் வணிக ஆணையாளராக செயல்படுத்துகின்றது. அதன்படி வருடத்திற்கு 20 ஆயிரம் பேருக்கு 10 லட்சம் ரூபாய் வரை வங்கிகளில் கடன் உதவி வழங்கப்பட உள்ளது. இதற்கு 25 சதவீதம், அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபரின் பெயர் ரேஷன் கார்டில் இருப்பதோடு வயது 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி கிடையாது. உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் ஆகிய பிரிவுகளில் தொழில்களை தொடங்கலாம். விண்ணப்பதாரரின் தொழில் திட்டங்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். கடன் வழங்க விண்ணப்பம் பெறும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் கடன் பெற்ற தொழில் தொடங்க பெண்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
