ஆதவ் அர்ஜுனா உறவினர் போதைப்பொருள் கடத்தலின் Master Mind தானே..? இதை சொன்னதால் தான் யுடியூபர் மாரிதாஸ் கைதா..? அதிமுக கேள்வி..!!

By Soundarya on ஆனி 8, 2026

Spread the love

பிரபல வலதுசாரி யூடியூபர் மாரிதாஸ் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் தவெக கூட்டணி அரசுக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் மதுரையில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மாரிதாஸ் தனது எக்ஸ் (X) மற்றும் யூடியூப் தளங்களில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் மாநில அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்துத் தொடர்ச்சியாகக் காணொளிகளையும் பதிவுகளையும் வெளியிட்டு வந்தார். இதன் அடிப்படையில், சென்னை சைபர் கிரைம் காவல்துறை அவர் மீது தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

யூடியூபர் மாரிதாஸ் அவர்களைக் கைது செய்ய அவரது வீட்டின் முன்பு காவல்துறையினர் குவிந்திருப்பதாக வெளியாகும் செய்திகளைத் தொடர்ந்து, அதிமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தற்போதைய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் பாசிச போக்குடன் இந்த அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அதிமுக, “ஆட்சி மாறி விட்டதோ? ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

   

அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனையில் ரூ.258 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில்,ஆதவ் அர்ஜுனா உறவினர் ‘ஜான் பிரிட்டோ’ என்பவர் மூளையாகச் செயல்பட்டதாக சொன்னது உண்மை தானே. இந்த விவகாரத்தில் உண்மை இல்லை என அரசு கருதினால், அவதூறு வழக்கு தொடரலாம் அல்லது செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கலாம்; அதைவிடுத்து, விசாரணைக்கு நோட்டீஸ் கூட தராமல் நேரடியாகக் காவலர்களை அனுப்பி கைது செய்யத் துடிப்பது ஏன் என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

   

மடியில் கனமிருப்பதால்தான் வழியில் பயம் இருக்கிறதோ என்று சாடியுள்ள அதிமுக, ஜனநாயகக் குரலை ஒடுக்க முயலும் இந்த அரசின் அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளது. மேலும், யூடியூபர் மாரிதாஸ் அவர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் இத்தகைய அராஜக நடவடிக்கைகளை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.