பழிக்கு பழி.. அரசு பள்ளி வாசலில் நடந்த பயங்கரம்… மதுராந்தகத்தில் ஓட ஓட வெட்டப்பட்ட வாலிபர்… பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்….!

By Nanthini on வைகாசி 25, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட முந்தைய பகை, இன்று ஒரு கொடூரமான பழிவாங்கும் தாக்குதலில் முடிந்துள்ளது. நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன்கள் கோபி, குபேந்திரன் ஆகியோருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தரின் மகன்கள் தமிழரசன், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கும் இடையே கடந்த மாதம் கடுமையான வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது, தமிழரசனுக்கு ஆதரவாகப் பேசிய அவரது மைத்துனரான சென்னையைச் சேர்ந்த சுமன் என்பவரை, குபேந்திரன் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுமன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கோபி மற்றும் குபேந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்தில், மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு சுமன் வீடு திரும்பிய அதே நேரத்தில், சிறையில் இருந்த கோபியும் குபேந்திரனும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். தன் மீது தாக்குதல் நடத்தியவர்களைப் பழிவாங்கத் துடித்த சுமன், நேற்று நேத்தப்பாக்கத்தில் உள்ள கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு கோபியும் குபேந்திரனும் இல்லாததால், அவர்களை கிராமம் முழுவதும் தேடிப் பார்த்துள்ளார். அவர்கள் இருவரும் கிடைக்காத விரக்தியில், சுமன் மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்று அன்றிரவு அங்கேயே தங்கியுள்ளார்.

   

இந்த நிலையில், இன்று காலை சுமன் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் புறப்பட்டுள்ளார். அவர் கருங்குழி அடுத்த ரயில்வே மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது, அவரை ரகசியமாகப் பின்தொடர்ந்து வந்த சந்தோஷ் கண்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல், திடீரென அவரை வழிமறித்துள்ளது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் சுமனை கொடூரமாக வெட்டத் தொடங்கியது. தப்பிக்க முயன்ற சுமனை விடாமல் துரத்தித் துரத்தி தலை, கை, கால்கள் என உடலின் பல்வேறு இடங்களில் அந்த கும்பல் பலமாகத் தாக்கியுள்ளது.

   

ரத்த வெள்ளத்தில் சரிந்த சுமனை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மதுராந்தகம் போலீசார், தாக்குதல் நடத்திவிட்டுத் தலைமறைவான சந்தோஷ் கண்ணன் உள்ளிட்ட ஐந்து பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இது முந்தைய மோதலுக்குப் பழிக்கு பழியாக நடந்த சம்பவமா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பட்டப்பகலில், ஒரு அரசுப் பள்ளியின் வாயில் அருகிலேயே இந்த பயங்கரத் தாக்குதல் அரங்கேறியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.