கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அமைச்சர் சி.வி. கணேசனுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த மின் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அஜித் என்ற இளைஞர், அங்கிருந்த கட்சிக் கொடி நட்டு வைக்கப்பட்டிருந்த கம்பியைப் பிடித்தபோது, அது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த மின்மாற்றி (Transformer) மீது உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உற்சாகமாகத் தொடங்கிய பிரசாரக் களத்தில் கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தைக் கண்டு அவரது உறவினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கதறி அழுத காட்சி அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியது.
