கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, ஆன்லைன் கேம் விளையாடும்போது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அஜய் (21) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த இளைஞர், மாணவியுடன் வீடியோ காலில் பேசி ஆபாசமாக உரையாடியதை ரகசியமாகப் பதிவு செய்து வைத்துள்ளார். அந்த வீடியோவைக் காட்டி மாணவியை மிரட்டி வந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி நடந்தவற்றைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், தொழில்நுட்ப உதவியுடன் குற்றவாளி அஜய் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருப்பதை உறுதி செய்தனர். அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அந்த இளைஞரைக் கைது செய்து மார்த்தாண்டம் அழைத்து வந்தனர். விசாரணையில், மாணவியை ஆபாச வீடியோவைக் காட்டி மிரட்டியது உறுதியானதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆன்லைன் மூலம் சிறுமிகளை குறிவைத்து நடக்கும் இத்தகைய குற்றங்கள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
