காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருமணமான பெண்ணுக்கும், வசந்த் என்ற இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவு, தற்போது விபரீத சம்பவத்தில் முடிந்துள்ளது. கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து வசந்துடன் சென்னையில் தங்கியிருந்த அந்தப் பெண், தன் குடும்பத்தை விட்டுவிட்டுத் தன்னுடன் நிரந்தரமாக வந்துவிடுமாறு வசந்தை வற்புறுத்தியுள்ளார். பலமுறை வாக்குவாதங்கள் நடந்த நிலையில், ஆத்திரமடைந்த வசந்த் திட்டமிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அந்தப் பெண்ணை மீட்ட அக்கம் பக்கத்தினர், மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், செல்போன் சிக்னல் மூலம் தலைமறைவாக இருந்த வசந்தை மாதவரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அவரைப் பார்க்க வர மறுத்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், மருத்துவமனையில் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ளார். கள்ளக்காதலால் ஏற்பட்ட இந்த விபரீத முடிவு, அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
