தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் மேலக்களக்குடியைச் சேர்ந்த காவ்யா (26) என்ற தற்காலிகப் பள்ளி ஆசிரியை, தான் காதலித்து வந்த அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமார் (29) என்பவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். காவ்யா ஆலங்குடி அரசுப் பள்ளியில் நடன ஆசிரியையாகப் பணியாற்றி வந்த நிலையில், அவரது பெற்றோர் இந்தக் காதலை ஏற்காமல், அவருக்கு வேறு ஒரு உறவினருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர்.
நிச்சயதார்த்தம் நடந்த பின்னரும், காவ்யா அஜித்குமாருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். சமீபத்தில், செல்போன் உரையாடலின் போது காவ்யா தனது நிச்சயதார்த்த விவரங்களையும், புகைப்படங்களையும் அனுப்பியதால், அஜித்குமார் மிகுந்த கோபம் அடைந்தார். நேற்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த காவ்யாவை ராமகிருஷ்ண மடம் அருகே வழிமறித்த அஜித்குமார் நிச்சயதார்த்தம் குறித்து ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அஜித்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவ்யாவைக் குத்தினார். இதில் படுகாயமடைந்த காவ்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், காவ்யாவின் உடலைக் கைப்பற்றியதுடன், அஜித்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
